லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இருவரும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் யாழ் நீதவான்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹபேயாஸ் கோபூஸ் முறைப்பாட்டிற்கு சாட்சியமளிப்பதற்கு தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விடுக்கப்பட்ட உத்தரவினை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் “லலித் - குகன் காணாமல் போன சம்பவம் : கோத்தாபய இம்முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பாரா?” என்ற தலைப்பில் theleader.lk செப்தெம்பர் 20ம் திகதி வெளிப்படுத்திய விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினைக் கவனத்தில் எடுத்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி தீபாலி விஜேசுந்தர இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். எவ்வாறாயினும் அச்சல வெங்கப்புலி இந்த முறைப்பாட்டு விசாரணைகளிலிருந்து விலகி இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011ம் ஆண்டிலிருந்து காணாமல் போயுள்ளதோடு, இது தொடர்பில் அவர்களைத் தேடித் தருமாறு அவர்களது குடும்பத்தினரால் ஹபெயாஸ் கோபூஸ் முறைப்பாட்டை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இம்மாதம் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக் காரணங்களினால் யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுவது சிரமமானது என்றும் கோத்தாபய ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு வெளிப் பிரதேசங்களின் நீதிமன்றங்களில் சாட்சியமளிப்பதற்கு தான் தயார் என்றும் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.