அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க
நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் கூறியிருந்த போதிலும், நாளை (26) மாலை 3.00 மணியளவில் இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தின் போது சில மூத்த உறுப்பினர்களைக் கொண்டு அமைச்சர் சஜித்துக்கு எதிராக எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதற்கான ஆயத்தங்கள் நிலவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்கு தெரிய வந்துள்ளது.
பிரதமர் இந்த எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள இருப்பது, ஜனாதிபதி தேர்தலின் போது ஒத்துழைப்பு வழங்குவதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் பல்வேறு சலுகைகள், பதவிகளைக் கேட்டு அதற்கு உரிய பதில் கிடைக்காததால் விரக்தியடைந்த நிலையில் உள்ள சில அமைச்சர்களே என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலின் போது ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஒரு அமைச்சர் பிரதி தலைவர் பதவி உள்ளிட்ட சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதுடன், வேறு சில அமைச்சர்கள் சஜித் அமைக்கும் அமைச்சரவையில் பலமிக்க அமைச்சுக்களைக் கேட்டுள்ளனர்.
இவ்வாறு ரணில் தரப்பின் அமைச்சர்கள் சிலருடன் கடந்த சில தினங்களாக தனித் தனியாகப் பேச்சவார்த்தைகளை நடாத்திய அமைச்சர் சஜித் பிரேமதாச, நிபந்தனைக்கு அடிபணிந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தான் தயராக இல்லை என்றும், எனினும் தனது அரசின் கீழ் எந்தக் கட்சிகளுக்கும் அநீதிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.