ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இணக்கத்தைத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று (24) இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களின் சந்திப்பின் போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹசீம், ரவி கருணாநாயக்கா, நவீன் திசாநாயக்கா, ரஞ்சித் மத்துமபண்டார, மலிக் சமரவிக்ரம போன்றோரும் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் பதவி ரணிலுக்கே!
எவ்வாறாயினும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வழங்கும் போது சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பது உள்ளிட்ட கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கைத் திட்டங்களை ஐ.தே.முன்னணியின் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையின் மூலம் நடைமுறைப்படுத்தல், கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், உப தலைவர் போன்ற கட்சியின் பதவிகளை வகிப்போரை மாற்றாமலிருத்தல், ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடித்தல் போன்ற நிபந்தனைகள் சில இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.