நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவ ஏற்பாடு செய்துள்ள
முதலாவது பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் சல்ஹாது விளையாட்டு மைதானத்தில் வரும் 09ம் திகதி மாலை 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேனவினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்த பிரசாரக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளாா். கூட்டு எதிர்கட்சி உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவிற்கு ஆதரவுவழங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளும் இரண்டு பிரசாரக் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடாத்துவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தீர்மானித்துள்ளது. இதற்குப் புறம்பாக தொகுதி மட்டத்திலும் பல்வேறு பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரும் முதலாம் திகதியிலிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் வீடு வீடாகச் சென்று மக்களைத் தெளிவு படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.