அரச சேவை ஆணைக்குழுவினால் தற்போது பணிஇடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி
டயஸ் விக்ரமசிங்க தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் விரும்பு விசாரணை அதிகாரி ஒருவரோ அல்லது சிலரையோ தெரிவு செய்யுமாறு ஐவரின் பெயர்களை அனுப்பியுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் தர்மசேன திசாநாயக்கா “ராவய” பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க அவண்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க அது தன்னுடைய குரல் பதிவே என சட்டமா அதிபரின் முன்னிலையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் சட்டமா அதிபரினால் தில்ருக்ஷி தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அரச சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையினை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபருக்கு தமது ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளுள் ஐவரின் பெயர்களை சிபார்சு செய்து அனுப்புவதற்கும், தேவையான அதிகாரி அல்லது அதிகாரிகளைத் தெரிவு செய்து கொள்வதற்கான பொறுப்பு சட்டமா அதிபருக்கு வழங்குவதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பான கடிதத்தை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.