ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண
தெரிவித்துள்ளது. இரு தரப்புக்குமிடையில் சின்னம் தொடர்பில் தோன்றியுள்ள குழப்பம் தொடர்பில் கருத்து தெரிவித்த “தாமரை மொட்டு” வின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவே இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தலைமையகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாட்களில் கட்சியின் சின்னம் மாற்றமடையுமா என இதன் போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த பெசில் ராஜபக்ஷ, “இது பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயம். நாட்டைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய எதனையும் மேற்கொள்வதற்கு நாம் தயார்” எனக் கூறினார்.
இதன் போது, ஸ்ரீ.ல.சு.கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக சின்னத்தை வேண்டுமானாலும் மாற்ற முடியுமா என ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். இதற்கு “இல்லை.... இனி முடியாதது எதுவுமில்லைதானே. முடியுமானதைச் செய்வோம்” என பெசில் ராஜபக்ஷ பதிலளித்தார்.