ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுத்து உத்தரவொன்றை
பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எவ்வித சட்ட அடிப்படையும் அற்றது என்றும், எனவே வழக்குத் தீர்ப்பு தொடர்பில் எந்த அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் மொட்டுக் கட்சியினதும், கூட்டு எதிர்கட்சியினதும் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மனுவுடன் தொடர்புடைய வழக்கு தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்களோடு நேற்று (30) இரவு மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே சட்டத்தரணிகள் இவ்வாறு கோரியுள்ளனர்.
இதன் போது குறித்த வழக்கு தொடர்பிலான கலந்துரையாடலை பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவே ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலங்கையில் பிறந்த கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இலங்கையின் பிரஜா உரிமை தொடர்பில் எவ்விதப் பிரச்சினைகளும் இருக்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார். பிழைகள் இருப்பின் அது நடைமுறைச் செயற்பாடுகளில் இடம்பெற்றவையாக இருக்க கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதன் போது கூறியுள்ளார். அவ்வாறாயின் அது தொடர்பில் அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தான் தற்போது இந்த வழக்கு தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அதன் பிரகாரம் சரியான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று (30) இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடர்பில் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கும் போது, குறித்த வழக்கு எவ்வித சட்டரீதியான அடிப்படைகளும் அற்ற வெறும் கழங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என அறிந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.