ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்த சகோதரரான் முன்னாள் சபாநாயகம் சமல் ராஜபக்ஷ மாற்று வேட்பாளராக நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பு
மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாக ராஜபக்ஷ முகாமுக்குரிய 'lankacnews.com' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளை (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறானதாக இருந்தாலும் வரும் நாட்களில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வரைக்குமான கால எல்லையில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஏதேனும் சட்டரீதியான தடைகள் ஏற்படாவிட்டால் சமல் ராஜபக்ஷ வேட்பாளர் நியமனத்திலிருந்து விலகி விடுவார் என்றும், கோத்தாபயவுக்கு ஏதேனும் தடைகள் ஏற்படுமாயின் சமல் ராஜபக்ஷ மாற்று வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.