தமது அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா இவ்வார இறுதியில்
ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக “தேசிய மக்கள் அமைப்பின்” பேச்சாளர் ஒருவர் கூறினார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மகேஷ் சேனநாயக்கா எந்த அரசியல் கட்சியில் போட்டியிடுகிறார்? என theleader.lk கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் அமைப்பு தற்போது தேர்தல் திணைக்களத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சி அல்லாத காரணத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியான எம். எஸ். எம். பெரேராவின் தேசிய மக்கள் கட்சியின் மின் குமிழ் சின்னத்தில் மகேஷ் சேனநாயக்கா போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்தக் கட்சியில் உள்ளக பிரச்சினைகள் இருக்கின்ற நிலையினுள் அந்தக் கட்சியில் போட்டியிடுவது பிரச்சினையானது இல்லையா? என கேட்ட போது,
அவ்வாறான நிலையினுள் இன்னும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நாட்களில் சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி வரும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா, இன்று (02) காலை இரத்தினபுரி சமன் தேவாலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.