ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியலிலிருந்து விலகியிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர
மற்றும் ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளரும், முக்கிய செயற்பாட்டாளருமாக இருந்த சட்டத்தரணி ஷிரால் லக்திலகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற தேர்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஊடகத் தொடர்பாடல் குழுவின் கூட்டத்திற்கு (MAC - Media and Communication Committee) இவர்கள் இருவரும் கலந்து கொண்டதாக ஐ.தே.கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பாடல் அணியின் முன்னாள் பிரதானியான சுதத் சந்திரகேர, MAC குழுவின் அழைப்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தன, ஹரீன் பெர்னாண்டோ, ஹர்ச த சில்வா, சுஜீவ சேனசிங்க, அஜித் பீ. பெரேரா, ரஞ்சன் ராமநாயக்கா, நலின் பண்டார, எஸ். எம். மரிக்கார், மனுச நாணயக்கார போன்றோரும் MAC குழுவில் அங்கம் வகிப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.