ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை
பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குடிவரவு, குடியகழ்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்காக ஆஜரான அரச பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே கருத்து தெரிவித்து பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான முதலாவது விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தில் இல்லை என நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அந்நேரம் கோத்தாபய ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா கருத்து தெரிவிக்கையில், குறித்த ஆவணங்கள் இல்லாமல் இந்த வழக்கு விசாரணையினை முன்னெடுத்துச் செல்வதால் தனது கட்சிக்காரருக்கு கடும் பாதிப்புக்கள் ஏற்படுவதாகச் சுட்டிக் காட்டினார்.
நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும், இதுவரையில் முடிக்கப்படாத விசாரணைகளின் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு மனு ஒன்றைச் சமர்ப்பித்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பிரச்சினையானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா, சில வேளை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் விசாரணையில் தனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டால் இந்த மனுவிற்கு அடிப்படையான விடயங்கள் அடிப்படையற்றதாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.