ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்காக ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் நாளை வெள்ளிக்கிழமை
செலுத்தப்பட உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச அக்கட்சியின் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இன்று (03) உத்தியோகபூர்வமான அறிவிக்கப்பட்டார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் வைத்து தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச என கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணை சபையினரால் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பிரதமரால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மனைவியும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தாயுமான ஹேமா பிரேமதாசாவை மேடைக்கு அழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் கூடியிருந்த கட்சி அங்கத்தவர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.