கோத்தாபய ராஜபக்ஷ 2005ம் ஆண்டில் இரட்டைப் பிரஜா உரிமையினைக் கேட்டு சமர்ப்பித்த விண்ணப்பம் எதுவும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்
தெரிவிக்குமாறு அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியதாக அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சானக த சில்வா நேற்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழை செல்லுபடியாக்கும் சர்டியோராரி ரிட் கட்டளையினை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே சட்டத்தரணி சானக த சில்வா இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அரசினதும், அமைச்சரவையினதும் தலைவர் என்றாலும், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை முன்னெடுப்பது பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையே என்பதால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழில் கையொப்பமிட்டது சட்டவிரோதமானது என அமைச்சர் சாா்பில் ஆஜரான சட்டத்தரனி சானக த சில்வா மேலும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு நாட்டு மக்களின் வாக்குகள் (சர்வஜன) மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளதால் அவர் வேறு அமைச்சர் ஒருவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என கோத்தாபய ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரி ரொமேஷ் த சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.