இலங்கையின் தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே போன்ற இனத்தவர்களை சிறுபான்மையினர் எனக் குறிப்பிடுவது தகுந்ததல்ல என்றும், தான் அவர்களை ஏனைய
இனத்தவர்கள் என்றே குறிப்பிடுவதாகவும் ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார். நேற்று முன்தினம் (03) இரவு கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முஸ்லிம் அறிவுசார் இளம் அமைப்பாளர்களால் இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது அங்கு பேசிய அமைச்சர் சஜித், தீவிரவாதத்திற்கு எந்த வகையிலும் இடம் வழங்கப்படக் கூடாது என்றும், சுருங்கக் கூறுவதாயின் தீவிரவாதத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்றும் கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“இன்று அனேக இடங்களில் சிறுபான்மையினர் என்ற சொல் பயன்படுத்துப்படுவதை நான் பார்க்கின்றேன். நான் அவ்வாறு சிறுபான்மையினர் என்ற சொல்லைப் பயன்படுத்தப் போவதில்லை என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நான் அவர்களை இந்நாட்டில் வாழும் ஏனைய இனத்தவர்கள் என்றே கருதுகின்றேன். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் கௌரவம் இருக்கின்றது. சிறுபான்மையினர் எனும் போது அது கீழே கொட்டுவதைப் போன்றே நான் உணர்கின்றேன்.
விஷேடமாக சஜித் பிரேமதாசாவின் ஆட்சியினுள் நான் நம்பிக்கை கொள்வதைப் போன்று நான் கடைபிடிக்கும் கொள்கைகளை நான் மிகவும் வெளிப்படையாகவே என் உள்ளத்தினாலேயே உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
நாம் எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இது ஓரிருவரின் குடும்பத்திற்குரிய நாடு அல்ல. உங்களதும், எனதும், எம்மனைவரினதும் நாடு. இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமாக விடயமாகும். தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நாம் அனைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.