அடுத்த மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்
. இன்று திங்கட்கிழமை (07) காலை ராஜகிரிய தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, இதில் 35 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை ஒப்படைத்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்ததோடு அவர்களுள் 6 போர் இன்று வேட்பு மனுக்களை ஒப்படைக்கவில்லை.
தற்போதைய பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் குமார வெல்கம மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் இவ்வாறு வேட்பு மனுக்களை ஒப்படைக்காதவர்களுள் அடங்குவர். இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்காக இரண்டு எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு அமைய இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல் இதுவாகும்.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் அதிகாரத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தி போட்டியிடும் அமைச்சர் சஜித் பிரேமதாசா புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.