நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்ற விடயம் தொடர்பில் தற்போது அக்கட்சியினுள் ஏற்பட்டுள்ள
நெருக்கடி மேலும் வலுவடைந்துள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நாளை (09) திகதி கட்சித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
இதனடிப்படையில் நாளைய தினம் பதினைந்து பேரைக் கொண்ட அரசியல் சபை ஒன்றை நியமித்து கட்சியின் பதில் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்வதற்காக கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை அக்கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்த நிலையில் தற்போது கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியை புறக்கணித்து விட்டு மொட்டு கட்சியில் இணைவதற்கு ஆயத்தமாக இருப்பதை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தே ஜனாதிபதி இத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.