நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்க ஸ்ரீ.ல.சு.கட்சி
தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உப தலைவர் நிமல் சிரிபால த சில்வா இன்று காலை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒத்துழைப்பை வழங்குவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைந்ததாக அர்த்தம் அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
“இவ்வாறான தேசிய தேர்தலின் போது எம்மால் மௌனமாக இருக்க முடியாது. நாடு படுபாதாளத்திற்குள் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டைப் பாதாளத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் மக்கள் விருப்பங்களுடன் பயணிக்க வேண்டும். கோத்தாபயவின் வெற்றிக்காக ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் ஆசீர்வாதத்துடன் நாம் தீர்மானத்தை மேற்கொண்டோம். இது மொட்டு கட்சியுடனான இணைவு அல்ல” என இதன் போது நிமல் சிரிபால த சில்வா கூறினார்.
“ஸ்ரீ.ல.சு.கட்சி கோத்தாபயவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்” என்றும் இதன் போது நிமல் சிரிபால த சில்வா கூறினார்.