“90 வீதத்திற்கும் அதிகமான ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்கள் மொட்டுக்கு ஆதரவு வழங்குவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்த நிலையில் நீங்கள் எவ்வாறு
கோத்தாவுக்கு ஆதரவு வழங்கலாம்?” என கேள்வி கேட்டு, “உங்களது தனிப்பிட்ட தேவைகளோடு மாத்திரம் நின்று கொண்டு எங்களது பெறுமதியான கட்சியை அழித்து விட வேண்டாம்” என்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிவித்தலின் தமிழாக்கத்தை கீழே தருகின்றோம்.
எங்களது அமைப்பாளர்களுள் 90 வீதத்திற்கும் அதிகமானோர் தாம் மொட்டு கட்சியுடன் இணைவதற்கு எதிர்ப்பு எனத் தெரிவத்திருந்த போதிலும் நீங்கள் கோத்தாவுக்கு எவ்வாறு ஆதரவை வழங்க தீர்மானிக்க முடியும்?. இது ஸ்ரீ.ல.சு.கட்சியை முற்றாகக் காட்டிக் கொடுக்கும் செயலாகும்.
கட்சியின் தலைவர் பதவியைக் கைவிடுவதற்கு விருப்பம் என மைத்திரி கூறியிருந்தால், தலைவர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கும், கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கும்நாம் உங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.
எமது கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது நாம் ஐக்கிய தேசிய கட்சியுடனும், ஏனைய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்ததால் அல்ல. எமது தலைவருக்கு கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு பலமும், தூர நோக்கும் இல்லாமையும், ராஜபக்ஷக்களின் சதிகளில் ஏமாந்ததும் கட்சி அழிந்து போவதற்கு காரணங்களாக இருந்துள்ளது.
மைத்திரிக்கு அரச அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமை இருந்திருந்தால், ஸ்ரீ.ல.சு.கட்சியைக் கட்டியெழுப்பி சட்டத்தைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி ராஜபக்ஷக்களின் கொலைகள், கொள்ளைச் சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் நாடும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் இந்நேரம் மிக பலமிக்கதாக ஆகியிருந்திருக்கும்.
எனவே ஸ்ரீ.ல.சு.கட்சியை மிக நேசிக்கும், கட்சியைப் பற்றி அறிந்த ஒருவராக நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், உங்களது தனிப்பிட்ட தேவைகளுக்காக எமது பெறுமதியான கட்சி அழிந்து போவதற்கு இடமளித்து விடாதீர்கள்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரனதுங்க
(செய்தி மூலம் - lankaenews)