ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா, பதில் தலைவராக பேராசிரியர்
ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலம் முடியும் வரை மாத்திரமே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக theleader.lk நேற்று (08) செய்தி வெளியிட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்ற விடயம் தொடர்பில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்ததோடு, ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால போன்றவர்கள் மொட்டு கட்சியுடன் இணைய வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.
எவ்வாறிருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தனர்.