பாதுகாப்பான, ஒழுக்கம் நிறைந்த சமூகம் ஒன்றை உருவாக்குவது தனது பிரதான நோக்கம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்
கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். தனது வெற்றிக்காக மஹர, கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“நாம் முன்மாதிரிமிக்கவர்களாக இருக்க வேண்டும். இன்றிருக்கும் அரசியல் கலாசாரத்தை நாம் மாற்ற வேண்டும். சிறந்ததாக ஆக்க வேண்டும். நாம் உணர்ச்சிவசப்பட்டோ, குறுகிய நோக்கங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட தேவைககளுக்காகவோ செயற்பட முடியாது. உணர்ச்சிவசப்பட்டு எதிர்த்தரப்பினரின் சதிகளில் சிக்கிக் கொண்டு மோசமாக நடந்து கொள்வதை நான் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை” என அவர் அங்கு உரையாற்றும் போது கூறினார்.
கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு உரையாற்றியது ஊழல் மோசடிகள் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து ஐ.தே.கட்சி உறுப்பினர் காமினி ஜயவிகரம பெரோவின் மீது மிளகாய்த்தூள் வீசி தாக்கிய கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மேடையில் இருக்கும் போதாகும்.