ஹிஸ்புல்லாவிற்கு வழங்கும் வாக்குகள் இன மோதல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் சக்திகள் மீண்டும் ஆட்சிக்குவர காரணமாக அமையும் என
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ரத்ன தேரர், அவருக்கு எதிராக குரல் கொடுத்த கம்மன்பில,விமல் வீரவங்ச போன்றோர் இன்று ஒரு தரப்பிலேயே இருக்கின்றனர். இவர்களுடன் தான் ஹிஸ்புல்லாவும் இணைந்துள்ளார். இனத்தால் வேறுபட்டாலும் இனவாதிகள் ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாக இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்பட காரணமாக இருந்தவர்கள் தான் இன்று கோத்தாபய ராஜபக்ஷ்வின் வெற்றிக்காக இணைந்துள்ளனர்.இவர்களின் ஆட்சி மீண்டும் வந்தால் இனநல்லிணக்கம் மக்களின் சுதந்திரம் அனைத்தும் பாதிக்கப்படும்.இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்த்து அரசியல் லாபம் பெறவே இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் நடவடிக்கை பிரிவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.