ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினுள் தொடர்ந்தும் போராடி ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆதரவை தனக்குப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை
மேற்கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவுக்கோ மொட்டு கூட்டங்களின் போது 'ஹூ' கூறுவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் என மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
நேற்று (14) மாலை தயாசிரி ஜயசேகரவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டே கோத்தாபய இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
“உங்கள் இருவரைப் பற்றியும் நான் பார்த்துக் கொள்கின்றேன். அமரவீரவும், நீங்களும் செய்த உதவியினை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். பயப்பட வேண்டாம். நீங்கள் என்னோடு குருநாகல் கூட்டத்திற்கு வாருங்கள். உங்களுக்கு யாராவது ஹூ போட்டால் நான் உங்களோடேயே மேடையிலிருந்து இறங்கிச் சென்று விடுவேன். எதற்கும் பயப்பட வேண்டாம். நாம் ஒன்றாகவே போவோம். நான் உங்களை அழைத்துச் செல்ல உங்கள் வீட்டுக்கு வருகின்றேன்....” என நேற்று குருநாகல் யாப்பகூவவில் இடம்பெற்ற கூட்டத்திற்கு தயாசிரிக்கு அழைப்பு விடுத்தே கோத்தாபய இதனைக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மொட்டு கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவர் ஜொன்ஸ்டனினால் தனக்கு எதிராக ஹூ போடுவதற்கு ஒரு குழுவை தயார் செய்துள்ளதாகக் கூறி அந்தக் கூட்டத்தில் தயாசிரி கலந்து கொள்ளாவிட்டாலும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினரான டி.பி.ஏகநாயக்கா கூட்டத்தில் பேச ஆயத்தமான போது தொடர்ந்தும் ஹூ போட்டு மொட்டுக்கட்சியினர் அவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினர். இதனை நிறுத்துவதற்கு ஜொன்ஸ்டன் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.