சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக்
கட்சியின் அலுவலகத்தில் திஸ்ஸ அத்தநாயகவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, 'தற்போதும், எதிர்காலத்திலும் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான முரண்பாடுகளை எம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்தமுடியாது.
அவ்வாறிருக்க இலங்கையின் நிலப்பரப்பை சீனாவிற்கு விற்பனை செய்வதன் ஊடாக ஏற்படக்கூடிய ஆபத்து எத்தகையது என்பதை தேசப்பற்றாளர்கள் போன்று பேசுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தரப்பு சிந்தித்துப் பார்க்கவில்லையா?' என்று கேள்வி எழுப்பினார்.
எமது சந்ததி கட்சி (அபே பரபுற பக்ஷய), இலங்கை தேசிய செயற்திட்டம், தேசிய மக்கள் முன்னணி (ஜாதிக ஜனதா பெரமுன), தேசிய மலையக முன்னணி (ஜாதிக கந்துரட்ட பெரமுன), எங்கள் மக்கள் கட்சி (அபே ஜனதா பக்ஷய) ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக திஸ்ஸ அதநாயக குறிப்பிட்டார்