ற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கூற்று மற்றும் படத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்
கோத்தாபய ராஜபக்ஷவை ஊக்குவித்து கடந்த வார இறுதி பத்திரிகைகள் சிலவற்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரம் தொடர்பில் விசாரணையினை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“அது தவறானது என்பதை நாம் குறித்த வேட்பாளரின் கட்சிக்கு அறிவித்துள்ளோம். அதே போன்று ஜனாதிபதி செயலாளருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இது தொடர்பில் பதிலளிக்குமாறு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்” என இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
தற்போதை இராணுவத் தளபதி லெட்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர், புகைப்படத்துடனான கருத்தைப் போட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்திரிகை விளம்பரம் செய்திருப்பது கடுமையான தேர்தல் சட்ட மீறலாகும் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் அமைச்சர் அஜித் பீ.பெரேராவினால கடந்த 14ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், தற்போதைய இராணுவத்தளபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் சீருடையுடனான புகைப்படங்களை அரசியல் கட்சியின் ஊக்குவிப்புக்காகப் பயன்படுத்துவது தவறான செயலாகும் என்றார்.
“அது பழைய கூற்றுக்களாக இருக்கலாம். எனினும் தற்போதைய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ பெயர், பதவியைப் பிரசுரித்து அதனை பயன்படுத்துவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். இது எந்தவித சிறந்த அரசியல் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவை அல்ல” என்றும் அவர் கூறினார்.