தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவுக்கு வாக்களிப்பதற்கு எதிர்பார்த்திருப்பவர்கள் எவருக்காவது கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி
பெற்றுவிடுவார் என்ற அச்சமிருந்தால் அநுர குமார திசாநாயக்காவுக்கு 1ம் இலக்கத்தை வழங்கி விட்டு இரண்டாவது விருப்பு வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வேறு யாருக்காவது வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னியின் அரசியல் பீட உறுப்பினர் லால் காந்த கூறினார்.
கடந்த 02ம் திகதி எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லால் காந்த இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய லால் காந்த மேலும் கூறியதாவது,
“எம்மிடம் அதிகமான பேச்சுக்கள் இல்லை. நாம் செய்யப் போவது என்ன? வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டைப் பெற்று 12வது இடத்திலிருக்கும் எமது அநுர குமார திசாநாயக்காவின் சின்னத்திற்கு வாக்களிப்பதேயாகும்.
ஆனால் எமக்கு மூன்று விருப்பு வாக்குகள் இருக்கின்றன. அநுர குமார திசாநாயக்காவுக்கு வாக்களிப்பவர்கள் ஏனைய அனைத்தையும் புறந்தள்ளவிட்டு எமது சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட வேண்டியதுதான். ஆனால் நாம் சந்திக்கும் சிலர் உங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு வாக்களிக்கும் போது கோட்டா வென்று விடுவாறோ? எனக் கூறுகின்றனர்.
அவ்வாறானவர்களுக்கு நாம் கூற விரும்புவது ஒன்றுதான். அநுர குமார திசாநாயக்காவுக்கு ஒன்றை வழங்கிவிட்டு ஏனைய இரண்டு விருப்புக்களையும் கோட்டாவுக்கு எதிராக வேறு யாருக்கு வழங்கினாலும் அது எமக்குப் பிரச்சினையில்லை. கோட்டாவைத் தோற்கடிக்க வேண்டுமாயின் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு இரண்டாம் விருப்பு வாக்கினை வழங்கலாம்” என்றார்.