தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பிரதான கூட்டணிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு
ஆதரவை வழங்கத் தீர்மானித்ததன் பின்னர் அக்கூட்டமைப்பின் ஏனைய இரண்டு கூட்டணிக் கட்சிகளான டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ப்ளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இவ்விரு அமைப்புக்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இச்சந்திப்பு பிரதமரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் ஐ.தே.கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு பேசப்பட்டுள்ளதோடு, சஜித் பிரேமதாசாவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் விரிவான முறையில் பிரதமரினால் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் பின்னர் குறித்த இரண்டு அமைப்புக்களின் தலைவர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருவதோடு, இத்தீர்மானத்தை அடுத்த இரண்டு தினங்களுக்குள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அனேக தமிழ் அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பது சஜித் பிரேமதாசாவின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்குள் இருக்கும் தெளிவின்மையே என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக தற்போது பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.