“கோட்டாபயவின் வெற்றிக்காக ஜனாதிபதி நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குகின்றார்” என ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்த
கருத்து தொடர்பில் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா, தயாசிரி ஜயசேகரவை உடனடியாகக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வேறொருவரை தற்காலிகமாக செயலாளராக நியமிக்க தீர்மானித்திருப்பதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கக் கூடாது என 90 வீதமான ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கடுமையாகத் தெரிவித்திருந்த நிலையில் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழுவும் தீர்மானித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தத் தரப்பிற்கும் ஆதரவை வழங்காது தேர்தல் காலத்தில் நடுநிலையாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்த ஜனாதிபதி, தேர்தல் முடியும் வரையில் கட்சியின் தலைவர் பதவியையும் பேராசிரியர் ரொஹான் லக்ஷ்மன் பியதாசாவிடம் தற்காலிகமாக ஒப்படைத்திருந்தார்.
ஜனாதிபதி இவ்வாறு இதுவரை எந்த தரப்பிற்கும் ஆதரவை வழங்காது நடுநிலையாக இருந்து வரும் நிலையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர ஹெட்டிப்பொலவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றின் போது, மொட்டு கட்சியின் வேட்பாளர் கோட்டாபயவின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவை வழங்கி வருகின்றார் எனத் தெரிவித்திருந்தார்.