கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை நீக்கிக் கொள்ளப்பட்டதற்கான அனைத்து ஆவணங்களையும் தோ்தல்கள் ஆணைக்குழுவில்
சமர்ப்பித்துள்ளதாக கோட்டாபயவின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறிய விடயங்கள் அப்பட்டமான பொய் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அமைச்சர் அஜித் பீ.பெரேரா மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ ஆகியோர் இன்று தோ்தல்கள் ஆணைக்குழுவிற்குச் சென்று வினவிய போது, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது அவரது பிரதிநிதியோ அவ்வாறான எந்த சான்றிதழையும் தமக்கு வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவிற்குச் சென்று திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்.
“இன்று நாம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கச் சென்றோம். விஷேடமாக மொட்டுக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபயவினால் அவரது இரட்டைப் பிரஜா உரிமையை சட்டரீதியான நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வழங்கப்படும் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குமாறு நாம் எழுத்து மூலமான கோரிக்கையினை முன்வைத்தோம்.
நாம் அந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையாளரிடம் வழங்கிய போது, அவ்வாறான எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு எமக்கு வழங்காத ஒன்றை எவ்வாறு நாம் வழங்குவது என அவர்கள் கூறினார்கள். எனவே விஷேடமாக நாம் கூற விரும்புவது என்னவெனில், கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையேயாகும். அவர் ஒரு தவறான வேட்பாளர். இவ்வாறான வேட்பாளர் ஒருவருக்கு நாம் வாக்களித்தால் வெற்றி பெறப் போவது அமெரிக்கர் ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதியாவதாகும்” எனறார்