இராணுவத்திற்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணியை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் மாத்திரமின்றி, இராணுவத் தலைமையக நிர்மாணத்திலும்
கூட மோசடி செய்தமை தொடர்பில் தெளிவான பதிலை நாட்டுக்கு வழங்காது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வாக்கு கேட்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எந்த உரிமையும் இல்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திருட்டுக் கும்பலுக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சரியான தீா்ப்பை இம்மாதம் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வழங்குமாறு இந்நாட்டு மக்களிடத்தில் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை கோட்டே சோசீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்ந அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தலையிட்டு வெளிநாட்டவர்களுக்கு உறுதியின் மூலம் வழங்கப்பட்ட ஒரு அங்குல நிலத்தையேனும் காட்டுமாறு ராஜபக்ஷக்களிடமும், அவர்களது சேல்ஸ் ரெப்களிடமும் சவால் விடுவதாகவும் அமைச்சர் சம்பிக்க இதன் போது மேலும் குறிப்பிட்டார்.
பிரித்தானிய யுகத்திலிருந்து இந்தக் காணியில் அமைந்திருந்த இராணுவ தலைமையகம் அமைந்திருந்த இரண்டு காணிகள் இரண்டு உறுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆறு ஏக்கரைக் கொண்ட ஒரு காணி 75 மில்லியன் டொலருக்கு (8250 மில்லியன் ரூபாய்) விற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு காணிகள் விற்பனை செய்யப்படுவதாக நெஞ்சில் அடித்துக் கொள்ளும் ராஜபக்ஷ இவ்வாறுதான் காணிகளை விற்றுள்ளார்.