கலாநிதி இங்குருவத்தை சுமங்கல தேரர் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் வியாழக்கிழமை அதிகாலை முடிவுக்கு வந்தது.
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறியே தேரர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று புதன்கிழமை மத்திய கொழும்பில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறைவடைந்து சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் கலாநிதி இங்குருவத்தை சுமங்கள தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுதந்திர சதுக்கத்திற்குச் சென்றிருந்தனர்.
அவ்வாறு சென்றிருந்த அமைச்சர் சஜித் பிரேமதாச, தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு தான் மிக கௌரவமாகக் கேட்டுக் கொள்வதாக தேரரிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவ்விடத்திற்கு விஜயம் செய்து தேரரின் உடல் நிலையினைப் பரிசீலித்ததன் பின்னர் அவர் சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.