கோதுமை மாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும்,
நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும்.
எனவே உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமைமா வழங்குநர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில், வர்த்தகம், இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கிறார்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அனுமதியின்றி கோதுமாமாவின் விலை கூட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டவிரோதமாக விலையதிகரிப்பைச் செய்வதனூடாக நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவோர் தொடர்பில் கண்காணிக்குமாறு அவர் கடந்த 11 ஆம் திகதி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளின் ஈடுபடுவோருக்கு 2003 ஆம் ஆண்டு 60 ஆம் பிரிவின் 9 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், 5000 - 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.