முகத்தை மறைத்துக் கொண்டு ஆயுதங்களுடனான குழு ஒன்று ஹபராதுவ, மீபே பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (14) இரவு நுழைந்து
அவ்வீட்டுச் சொந்தக்காரரான சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான சுதந்திர ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“வீண்விரய அபிவிருத்தியும், மோசடிகளும்” என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வழங்கி வைத்தமையே இத்தாக்குதலுக்கு காரணம் என சுதந்திர ஊடகவியலாளர் விஜேரத்னவின் மனைவி மதுஷா பிரியங்கிகா தெரிவித்தார்.
விஜேரத்னவின தலையில் தலைக்கவசத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், மற்றொருவர் கத்தியால் குத்துவதற்கு முயன்றதாகவும், இத்தாக்குதல் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளராட்சி மன்ற அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.