பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் வரையில் ஐ.தே.கட்சி - கூட்டணி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்கட்சித் தலைவருக்கு யோசனை
ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
19வது திருத்தத்தன் கீழ் பொதுத் தேர்தலில் தெரிவாகும் அரசாங்கத்தை நான்கரை வருடங்கள் நிறைவடையும் முன்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை. இதனடிப்படையில் குறித்த நான்கரை வருடங்கள் நிறைவடையும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படல் வேண்டும்.
எவ்வாறாயினும் துரிதமாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தொடர்புடைய தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கும் என்று பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதே வேளை உரிய காலத்திற்கு முன்னர் அவசரமாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிாப்பை தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இன்று அநுராதபுரத்தில் அமைந்துள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த சில்வாவின் வீட்டில் இடம்பெற்ற அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவசர பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுவதற்கு ஆதரவை வழங்காதிருப்பதற்குத் தீர்மானித்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் இன்று இரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையில் கொழும்பில் இடம்பெறும் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.