நீதிமன்றத்தில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எந்த ஒருவருக்கும் புதிய அரசாங்கத்தில் பதவிகளை வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி
கோத்தாபய ராஜபக்ஸவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையிலேயே புதிய அமைச்சரவையை நியமிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஜனாதிபதி கோத்தாபய இன்று ஜனாதிபதி செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி செயலாளராக கலாநிதி பீ.பி.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ். ஆர். ஆட்டிகல திறைசேரியினதும், நிதி அமைச்சினதும் செயலாளராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் வெளியான செய்திகள் பொய்யானது என்றும், பிழையானதுமான செய்தியாகும் என அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.