சில மாதங்களில் பொதுத் தேர்தலை நடாத்தி பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் வரையில் காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கும்
, ஐ.தே.கட்சியின் சஜித்வாதிகளின் அழுத்தங்களினால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்தால், பிரதமர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் திணேஸ் குணவர்தனவுக்கு வழங்குவதற்கும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்குத் தெரிய வந்துள்ளது.
அந்த வட்டாரங்களுக்கு அமைய மஹிந்த ராஜபக்ஸ அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கிடும் போது தற்போது கடும் நெருக்கடி தோன்றியிருப்பதேயாகும்.
ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்கிய ஸ்ரீ.ல.சு.கட்சியின் உறுப்பினர்கள் ஒன்பது பேரின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, மொட்டுக் கட்சிக்கு ஆதரவை வழங்கிய கூட்டு எதிர்கட்சியின் பெருமளவிலானோர் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து தொடர்ந்தும் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறாயினும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் வியத்மகவின் முக்கியஸ்தர்கள் யோசனை தெரிவித்துள்ளமை நிலைமையினை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.