தமிழ் மக்களின் தேசிய இனப்
பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, சிங்கள சமூகத்தின் இடதுசாரித் தலைவர் தோழர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறது.
நவ சமசமாஜ கட்சியின் தலைவராக தனது 81ம் வயதில் காலமான அவர், சிறுபான்மை இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததோடு, எப்போதும் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
கழகத்தின் தலைமைகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த அவர், தனது இறுதிக் காலம் வரையிலும் அவ் உறவுகளை பேணி வந்தார்.
தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகள், இராணுவத்தின் வசமிருக்கும் நிலங்களை உரிமையாளர்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களுக்காக தென்னிலங்கையில் பல சந்தர்ப்பங்களில் பல இடங்களில், குறிப்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
தமிழ் மக்களின் நேர்மையான சிங்கள நண்பர்கள் எனும் பட்டியலில் அமரர் தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு என்றென்றும் தனித்துவமான இடம் இருக்கும் என்பது எமது நம்பிக்கை.