எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மொட்டுச் சின்னத்தில் தனி வேட்பாளரை முன்வைப்பதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று (29) தீர்மானித்திருந்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆனால், இந்தக் கூட்டத்தில் 79 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அடுத்த சில நாட்களில் அக்கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு இடம்பெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர் கடும் அமளி ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உடுகொட, கோகில ஹர்ஷனி குணவர்தன, சஹான் பிரதீப், ரமேஷ் பத்திரன காஞ்சன விஜேசேகர பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்கும் யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.
இது தொடர்பில் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், வெற்றி பெறக் கூடிய பொருத்தமான வேட்பாளர் முன்வைக்கப்படுவார் என்றார்.