மஹிந்த அமரவீர, லசந்த
அழகியவண்ண மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தின் மீது பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள் இன்று (30) மீள அழைக்கப்பட்டதையடுத்து கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை அதற்கான தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை தன்னிச்சையாக நீக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் எடுத்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என மனுதாரர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அந்த தீர்மானங்களை இரத்துச் செய்யுமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இவர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.