போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்
மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருட்களை பெற்றுக் கொண்ட சம்பவம் குறித்து சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.
இலக்கம் 142, ஜம்புகஸ்முல்ல மாவத்தை, நுகேகொடவில் வசிக்கும் அமைச்சர் பந்துல குணவர்தன செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உப பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் லக்மால் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்தபோதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முறைப்பாட்டாளரான அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு சொந்தமான இலங்கை வங்கியின் கடன் அட்டையின் நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மேலதிக நீதுவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட கணக்கு விபரங்களை வழங்குமாறு குறித்த வங்கியின் முகாமையாளருக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கோரினர்.
இதனையடுத்து உரிய வங்கிக் கணக்கு விபரங்களைப் பெற சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.