ஜனாதிபதித் தேர்தலில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஆதரவு தெரிவிப்பதாக வெளியான அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகர எக்ஸ் தளத்தில் தெரிவிக்கையில், “ஸ்ரீ.ல.சு.கட்சியை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், மத்திய குழுவில் இது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த அறிக்கையை நான் திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்.
“இந்த நபர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சட்டபூர்வ உரிமை இல்லை, எனவே, கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்ற வகையில், கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் இந்த முயற்சிகளையும் நான் கண்டிக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.