ஓட்டமாவடி நாவலடி சந்தியில்
இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகத்தில் மெளலவி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி நாவலடி பகுதியில் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் தொடர்பில் அரலகங்கவில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு இராணுவத்தின் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, மகசீன் மற்றும் 29 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் அவரது சகோதரரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர், அங்கு மற்றொரு T56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 30 தோட்டாக்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையின்போது, வாழைச்சேனை பதிரியா நகரில் வசிக்கும் 43 வயதுடைய சந்தேக நபர், தான் நாவலப்பிட்டி பிரதேசத்தில் மெளலவியாக கடமையாற்றுவதாக கூறியுள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததாகவும் துப்பாக்கி மீது தனக்கு உள்ள அதீத ஆர்வம் காரணமாக அவற்றை தன்னிடம் வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.