ஐக்கிய மக்கள் சக்தியின்
தலைமையில் உருவாக்கப்படவுள்ள உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சிகளுக்கிடையிலான உடன்படிக்கை ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளது.
சுகததாச மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க, பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க போன்ற பலர் தமது கட்சிகள் மற்றும் குழுக்களுக்காக இங்கு இணைந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணிக்கு பின்னர் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியாக ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பிக்க - தயாசிறி - ரிஷாத் இன்னும் முடிவு எடுக்கவில்லை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அவர் அதனை மறுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் குடியரசுக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினதும் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்த சம்பிக்க, அடுத்த சில தினங்களில் தமது கட்சி கூடி உறுதியான தீர்மானத்தை எடுக்க நம்புவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.