சீதுவ லியனகேமுல்ல பிரதேசத்தில்
உள்ள ஹோட்டல் ஒன்றில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் இருவர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில், வாகரை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட், கொனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் கண்டி கேகாலை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களில் வசிக்கும் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சந்தேக நபர்களுடன் இரண்டு செட் விசேட அதிரடிப்படை சீருடைகள், இரண்டு பூட்ஸ், இரண்டு பெரட்கள், ஒரு பக்க ஹோல்டர், கைவிலங்குகள், இரண்டு வாள்கள் மற்றும் 5,129,000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பேலியகொட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.