பங்களாதேஷ் பிரதமரின்
இல்லத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பிரதமர் ஷேக் ஹசீனாவின் புடவை, பொட்டலங்கள், படங்கள் போன்றவற்றைத் திருடியதாகவும் ஹசீனாவின் அரசியல் அலுவலகத்தை முற்றாக அழித்ததாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்களும், ஷேக் ஹசீனா படுக்கையில் படுத்தவாறே மூன்று இளைஞர்கள் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து போராட்டக்காரர்கள் பொருட்களை திருடுவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருவதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவாமி லீக்கின் பிரதான கட்சித் தலைமையகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகவும் அவாமி லீக்கின் பொதுச் செயலாளர் ஒருவரின் ஹோட்டலுக்கு தீ வைக்கச் சென்றபோது, 8 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாகவும், 84 பேர் காயமடைந்ததாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவாமி லீக் எம்.பி.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், போராட்டக்காரர்கள் தலைமை நீதிபதியின் வீட்டை சேதப்படுத்தியதாகவும், பங்களாதேஷின் அனைத்து நீதிமன்றங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டக்காரர்கள் பங்களாதேஷ் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்துள்ளதோடு, அதன் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்துள்ளதாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பாராளுமன்றத்தை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்.பி.க்களின் இருக்கைகளில் அமர்ந்து செல்ஃபி எடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமையும் வரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்காளதேசம் தீப்பற்றி எரிந்த நிலையில், இந்தியாவின் காசியாபாத் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவை ஷேக் ஹசீனா சந்தித்ததாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.