ஜனாதிபதித் தேர்தலில் யாரை
ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சியின் அரசியல் உயர்பீடம் இன்றிரவு (06) கூடி தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீன் 'தமிழ்லீடர் இணையத்துக்கு தெரிவித்தார்.
எமது தீர்மானம் தொடர்பில் இன்றிரவு அல்லது நாளை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
'ரவூப் ஹக்கீம் போன்று நீங்களும் தீர்மானம் எடுக்காமல் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்' என ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் அழைக்கப்பட்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றிய கருத்தறியும் நிகழ்வு வெள்ளவத்தை கிறீன் பலஸ் ஹோட்டல் மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் ரிஸாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணி என்.எம்.ஷஹீத், கலாநிதி யூஸூப் மரிக்கார், கலாநிதி அனீஸ் ஆகியோர் கட்சி சார்பில் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள் என பல்வேறு பட்ட துறைசார்ந்தவர்களும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கட்சி முக்கியஸ்தர்களுக்கு அப்பால் மற்றவர்களின் கருத்துகளையும் பெற்றுக் கொள்ளச் செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டை கருத்துக் கூறிய அனைவரும் சிலாகித்தனர். சமூகத்தின் கல்வி, பாதுகாப்பு, பொருளாதார நிலை, எதிர்காலம் என்பன குறித்துக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கலந்து கொண்டோரின் சமூகப் பார்வை அடிப்படையில் அரசியல் பங்களிப்பு குறித்து அதிகம் பேசப்பட்டது.
இறுதியில் தவிசாளர், தலைவர் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். தாம் வெவ்வேறு இடங்களில் பொதுமக்கள், கற்றவர்கள் என அழைத்துக் கருத்துகளைப் கேட்டறிந்து வருவதாகவும் தமது கோரிக்கைகளை முன்வைத்து வேட்பாளர்களுடன் உரையாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.