( எஸ்.ஆர்.லெம்பேட்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து மன்னார் மாவட்ட ஆதரவாளர்களுடன் சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) குஞ்சுக்குளம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு முழுவதும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஒரு கட்சி. நாட்டில் பத்து மாவட்டங்களில் பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கடந்த காலங்களில் போட்டியிட்டுள்ளது.
அதனடிப்படையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடும் வகையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்னார் உட்பட மேலும் பல மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு மக்களின் கருத்துக் கணிப்பை பெற்றுக் கொள்ள உள்ளோம்.
கடந்த 6 ஆம் திகதி எமது கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்டபோது கட்சிக்குள் இரு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே கட்சியின் உறுப்பினர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் இருந்தமையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளோம்.
கடந்த காலங்களில் சஜித்தின் கூட்டமைப்புடன் இருந்தமையினால் எதிர்க்கட்சி அரசியலை நான்கு வருடங்களாக முன்னெடுத்தோம்.
இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கட்சியும் 14 ஆம் திகதி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு,முழு மூச்சாக குறித்த வேட்பாளரை வெற்றி பெற செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சி ஆதரவு வழங்க உள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்றார்.