நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்
பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியமை கட்சிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:
சரத் பொன்சேகா அரசியலுக்கு பொருந்தாதவர். அவர் போரில் ஜெனரல் என்றாலும், அரசியலில் ஒரு கோப்ரல் அளவுக்கும் அவருக்கு அறிவு இல்லை.
சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளும் தலைவர்களும் கைகோர்த்து வருகின்றனர். இது ஒரு வரலாற்று தருணம்.
எதிர்காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியே நியமிக்கப்படுவார்.
இவ்வாறானதொரு ஜனாதிபதி நாட்டில் நியமிக்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தீர்வுகளை வழங்க முடியும்.
சஜித் பிரேமதாச நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டின் அனைத்து மதங்களையும் இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது என்றார்.