எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் அத்தனகலயில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் முன்னிலையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அங்கு கருத்து வெளியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், அத்தனகல்ல பிரதேசத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விருப்பமான எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.