ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை சட்டத்தரணியான ஷான் ரணசூரியவே தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நீதி அமைச்சர் பதவிக்கு அலி சப்ரியை நியமித்துள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதுடன், தனது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.