தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லாஹ் உட்பட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவும், தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் சுகத் ஹேவாபத்திரன உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நாட்டில் நிலவும் பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செயல்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஏ.எல்.எம். அதாவுல்லா எம்.பி உறுதியளித்துள்ளார்.
இதன்போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான தேசிய காங்கிரஸின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.